शनिवार, 14 सितंबर 2013

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை- Sri-Arunachala-AksharaManaMalai.

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

                                 (காப்பு)

அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமணமாலை சாற்றக்
கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.

*அருணாசல சிரேஷ்டனுக்கு(நாயகனுக்கு) ஏற்ற அக்ஷரமணமாலையை சாற்றுவதற்கு
    கருணைக் கடலான கணபதியே! நீ எனக்குக் கைகொடுத்துக் காப்பாயே!
                                 (நூல்)

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!

1. அருணாசலம் என அகமே நினைப்பவர்
     அகத்தை வேரறுப்பாய் அருணாசலா                            

2. அழகு சுந்தரம் போல் அகமும் நீயும் முற்று
    அபின்னமாய் இருப்போம் அருணாசலா

3. அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்
      அமர்வித்தது என்கொல் அருணாசலா

4.ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில்
     அகிலம் பழித்திடும் அருணாசலா!

5.இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாசலா!

6.ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா!

7.உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாசலா!

8.ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாசலா!

9.எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா!
10.ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
இது உனக்கு அழகோ அருணாசலா

11.ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தில் நீ இலையோ அருணாசலா!

12.ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
 உன் சூதேயிது அருணாசலா

13.ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனை யார் அறிவார் அருணாசலா

14.ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை
ஆளுவது உன் கடன் அருணாசலா

15.கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
காணுவது எவர் பார் அருணாசலா

16.காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல்
கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா

17.கிரி உரு ஆகிய கிருபைக் கடலே
கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா

18.கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்
கீழ்மையைப் பாழ் செய் அருணாசலா!

19.குற்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
 குரு உருவாய் ஒளிர் அருணாசலா

20.கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள்
கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா

21.கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
அஞ்சல் என்றே அருள் அருணாசலா!

22.கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக்
கேடு செய்யாது அருள் அருணாசலா!

23.கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை
வெறி கொள அருள் அருணாசலா!

24.கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக்
கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா!
 25.கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
குறை என்செய்தேன் அருணாசலா!

26.கௌதமர் போற்றும் கருணை மாமலையே
கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா!

27.சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன
சலசம் அலர்த்தியிடு அருணாசலா!

28.சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்
சாந்தமாய்ப் போவன் அருணாசலா!

29.சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத
வாயைத்திற அருண்மதி அருணாசலா!

30.சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள்
சீரை அளித்து அருள் அருணாசலா!

31.சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா!

32.சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
ஜோதி உருக்காட்டு அருணாசலா!

 33.செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாசலா!

34.சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர்
ஆற்று அழிவேன் அருணாசலா!

35.சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
உய்வகை ஏது உரை அருணாசலா!

36.சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாசலா!

37.சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
சொல் வேறு என் கதி அருணாசலா!

38.சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாசலா!
39.ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாசலா!

40.ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானம் தெரித்தருள் அருணாசலா!

41.ஞிமிறுபோல் நீயும் மலர்ந்திலை என்றே
நேர் நின்றனை என் அருணாசலா

42.தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
தத்துவம் இது என் அருணாசலா

43.தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் அருணாசலா

44.திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாசலா

45.தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான்
திரும்ப உற்றேன் அருள் அருணாசலா

46.துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
ஒப்பிட வாய் ஏன் அருணாசலா

47.தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
தோயவே அருள் என் அருணாசலா

48.தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாசலா

49.தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத்
தியக்கம் தீர்த்து அருள் அருணாசலா
 50.தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான்
தட்டழிந்தேன் அருள் அருணாசலா

51.தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான்
நட்டமாவேன் அருள் அருணாசலா!

52.தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்
 சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா!

53.நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள்
நகையிட்டுப் பார் நீ அருணாசலா!

54.நாணிலை நாடிட நானாய் ஒன்றி நீ
தாணுவா நின்றனை அருணாசலா!

55.நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன்
நின் அருள் மழை பொழி அருணாசலா!!

56.நீ நான் அறப்புலி நிதம் களிமயமா
நின்றிடும் நிலை அருள் அருணாசலா!

57.நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
எண்(ண) அலை இறும் என்று அருணாசலா!

58.நூலறிவு அறியாப் பேதையன் என்தன்
மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா!

59.நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல்
நக்கனா நின்றனை அருணாசலா!!

60.நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ
மோசம் செயாது அருள் அருணாசலா!

61.நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில்
நாடி உட்கொள் நலம் அருணாசலா

62.நொந்திடாது உன்தனைத் தந்து எனைக் கொண்டிலை
அந்தகன் நீ எனக்கு அருணாசலா
63.நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா

64.பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள்
பற்றிட அருள்புரி அருணாசலா

65.பார்த்தருள் மால் அறப் பார்த்திலை எனின் அருள்
பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா

66.பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள்
பித்தம் தெளி மருந்து அருணாசலா

67.பீதிஇல் உனைச் சார் பீதியில் எனைச்சேர்,
பீதி உன் தனக்கு ஏன் அருணாசலா

68.புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை
புல்லிடவே அருள் அருணாசலா

69.பூமண மா மனம் பூரண மணம் கொளப்
பூரண மணம் அருள் அருணாசலா

70.பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன்
பெருமை யார் அறிவார் அருணாசலா!

71.பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப்
பேயன் ஆக்கினை என் அருணாசலா!

72.பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல்
பற்றுக் கோடாய்க் கா அருணாசாலா!!!

73.பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன்
போதத்தைக் காட்டினை அருணாசலா!!

74. போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட்
போராட்டம் காட்டு அருணாசலா!
 75.பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன்
பவிசு கண்டுற அருள் அருணாசலா!

76.மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள்
மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா!

77.மானங்கொண்டு உறுபவர் மானத்தை அழித்து
அபிமான மில்லாது ஒளிர் அருணாசலா

78.மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான்
வஞ்சியாது அருள் எனை அருணாசலா!

79.மீகாம னில‍்லாமன் மாகாற் றலைகல
மாகாமற் காத்தரு ளருணாசலா !

80.முடி அடி காணா முடி விடுத்து அனைநேர்
முடிவிடக் கடனிலை அருணாசலா

81.மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத்
தூக்கி அணைந்து அருள் அருணாசலா

82.மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம்
மெய் கலந்திட அருள் அருணாசலா!

83.மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்க் சேர்ந்துநீ
மேன்மையுற் றனையென் னருணாசலா

84.மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்மை
வசம் ஆக்கினை அருணாசலா

85.மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ
நட்டமா டினையென் னருணாசலா

86.மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்து என்
மோகம் தீராய் என் அருணாசலா

87.மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால்
மௌனம் இது ஆமோ அருணாசலா

88.யவன் என் வாயில் மண்ணினை அட்டி
என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா

89. யாரும் அறியாது என் மதியினை மருட்டி
எவர் கொளை கொண்டது அருணாசலா
90. ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது
எனை ரமித்திடச் செயவா அருணாசலா .

91.ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில்
ரமித்திடுவோம் வா அருணாசலா!!!

‎92.லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப்
பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா!!

93. லாபம் நீ இகபர லாபம் இல் எனை உற்று
லாபம் என் உற்றனை அருணாசலா .

94. வரும்படி சொலிலை வந்துஎன் படிஅள
வருந்திடு உன் தலைவிதி அருணாசலா

95. வாவென்று அகம் புக்கு உ ன் வாழ்வு அருள் அன்றே
என் வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா .

96.விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர்
விட்டிட அருள்புரி அருணாசலா!!

97. வீடு விட்டு ஈர்த்து உள வீடு புக்குப் பைய உன்
வீடு காட் டினை அருள் அருணாசலா.

 98.வெளிவிட்டேன் உன்செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா

99.வேதாந்தத்தே வேறு அற விளங்கும்
வேதப் பொருள் அருள் அருணாசலா

100.வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா
வைத்து எனை விடாது அருள் அருணாசலா

101.அம்புவில் ஆலிபோல் அன்பு உரு உனில் எனை
அன்பாக் கரைத்து அருள் அருணாசலா

102.அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன்
உன் அருள்வலை தப்புமோ அருணாசலா
103.சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச்
சிறையிட்டு உண்டணை அருணாசலா

104.அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
அன்பன் ஆயிட அருள் அருணாசலா

105.என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ
எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாசலா

106.என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என்
புன் மொழி கொள அருள் அருணாசலா

107.பொறுமையாம் பூதர பன்சொலை நன்சொலாப்
பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா

108.மாலையளித்து அருணாசலா ரமண என்
மாலை அணிந்து அருள் அருணாசலா

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!


அருணாசலம் வாழி அன்பர்களும் வாழி
அக்ஷர மணமாலை வாழி.


_______________________________________
***************************************